மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட உள்ள மன்னார் புதிய பஸ் நிலையம்.

338 0

மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பஸ் நிலைய கட்டிடம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07) உத்தியோகபூர்வமாக மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்படவுள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டின் சுமார் 130 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பஸார் பகுதியில் சகல வசதிகளுடன் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.

குறித்த பஸ் நிலையம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மன்னார் நகர சபையிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட உள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் நேற்று (04) மதியம் மன்னார் நகர சபையில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் மன்னார் நகர சபையின் செயலாளர், உப தலைவர், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் நகர சபையிடம் குறித்த பஸ் நிலையம் கையளிக்கப்படும் நிலையில் பிரிதொரு தினத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு புதிய பஸ் நிலைய திறப்பு விழா நிகழ்வு இடம் பெற ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டது என மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் மேலும் தெரிவித்தார்.