மட்டக்களப்பில் குழு மோதல்; நால்வருக்கு வாள்வெட்டு

249 0

மட்டக்களப்பு-  சந்திவெளி, திஹிலிவெட்டை பிரதேசங்களில் நேற்றிரவு (04) இடம்பெற்ற குழு மோதல்களில், நால்வர் வாள் வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனரென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் மேலும் 08 பேரைத் தேடி வருவதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் குழு மோதல், கடந்த மூன்று நாள்களாக இடம்பெற்று வந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

கடந்தாண்டு நடைபெற்ற கோவில் உற்சவம் ஒன்றின் போது பெண்களுடன்   ஒரு குழுவினர் சேட்டையில் ஈடுபட்டதால் ஏற்பட்ட வார்த்தர்க்கம் குழு மோதலாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, சட்டவிரோத மரக்கடத்தைத் தடுக்க முற்பட்டதில் வாய்த்தர்க்கம் ஆரம்பமானதாகவும் கூறப்படுகிறது.

சந்திவெளி பிரதேச குழுவினர், திஹிவெட்டைக்கு பகுதிச் சென்று சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, திஹிலிவெட்டை பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் சந்திவெளி பகுதிக்கு வந்து மோதலில் ஈடுபட்டதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு மோதலின்போது குறித்த பிரதேசங்களில் மிகுந்த பதட்ட நிலை காணப்பட்டதாக, பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த மோதலை சிலர், அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலாக சித்தரிக்க முனைவதாக, அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.