வவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டார் செல்கள் கண்டெடுப்பு

444 0

வவுனியா- ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றின் காணியிலிருந்து வெடிபொருட்களை  பொலிஸார் இன்று (சனிக்கிழமை) கண்டெடுத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,  ஈச்சங்குளம் – சாளம்பன் பகுதியிலுள்ள தனியார் காணியை அதன் உரிமையாளர் உழவியந்திரம்  ஊடாக பண்படுத்தியுள்ளார்.

இதன்போது பண்படுத்தப்பட்ட குறித்த காணியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த வீட்டு உரிமையாளர், ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அப்பகுதியை சோதனை செய்து பார்த்தபோது இரண்டு மோட்டார் செல்களை அவதானித்துள்ளனர்.

எனினும் மண்ணில் புதையுண்டு மேலும் வெடிபொருட்கள் அதனுள் இருக்கலாம் என்று தெரிவித்த பொலிஸார், நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த பகுதியை ஆழமாக்கி சோதனை மேற்கொள்ளவுள்ளதாக  மேலும் தெரிவித்தனர்.