கொரோனாவுக்கு எதிராக சுகாதார ரீதியாக போராட வேண்டுமே அன்றி துப்பாக்கியால் அல்ல – சுரேஸ்

280 0

கொரோனாக்கு எதிராக சுகாதார ரீதியாக போராடுவதேயன்றி துப்பாக்கி கொண்டு போராடுவது இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில், “இராணுவ கெடுபிடிகள் இங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இந்த இராணுவ கெடுபிடிகள் அதிகமாக இருக்கின்றது.

தென்னிலங்கையில் இவ்வாறான கெடுபிடிகள் இல்லாத சூழலில், கொரோனா அச்சுறுத்தல் இல்லாத பிரதேசத்தில் இவ்வாறு இராணுவ கெடுபிடிகள் அதிகம் காணப்படுகின்றது.

போக்குவரத்து செய்கின்றவர்கள் பதிவு செய்து செல்லவேண்டிய சூழல் காணப்படுவதுடன், அரசாங்கம் ஒருபடி மேலே சென்று முல்லைத்தீவில் இராணுவத்தினரால் வீடு வீடாக சென்று விபரங்களை திரட்டுகின்றது.

கொரோனா அச்சுறுத்தல் நிறைந்த காலப்பகுதியில் இராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இவை தொடர்பாக அதிகளவில் முறைப்பாடுகள் கிடைக்கின்றன. தேவைக்கு மேலதிக இராணுவ குவிப்பு மற்றும் சந்திக்கு சந்தியில் விபரங்கள் திரட்டுவது தொடர்பாகவும் பொதுமக்களால் குற்றம் சாட்டப்படுகின்றது.

கொரோனாவிற்கு எதிராக போராடுவது என்பது சுகாதார ரீதியில் போராடுவதேயன்றி துப்பாக்கிக் கொண்டு போராடுவது அல்ல. ஆனையிறவு தாண்டி இன்று வருகின்றபோ,து இருமருங்கிலும் ஆயுதம் தாங்கிய படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இது யுத்தம் காணப்படும் பிரதேசமாகவே காணப்படுகின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.