யேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடைபெற்ற மே 18இன் இன அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு-2020

1275 0

தமிழின அழிப்பின் உச்ச நாளான மே 18 2009ஆம் ஆண்டு சிறிலங்கா இனவாத அரசினால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு 18.5.2020 திங்கட்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரத்தின் பிரதான நகரமத்தியில் வணக்க நிகழ்வு இடம்பெற்றது. கொடிய கொரோனா கொள்ளை நோயின் தாக்கத்தில் உலகமே அதிர்ச்சியுற்றிருக்கும் வேலையில் இந் நோய்க்கான யேர்மனிய சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக இந் நிகழ்வு யேர்மனியின் பல மாநிலங்களில் இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஸ்ருட்காட் நகரத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா சட்ட விதிகளுக்கு அமைவாக வந்து இலங்கை அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட தழிழ்மக்களுக்கு மலர் தூவி சுடர் ஏற்றி வணக்கம் செலுத்திச் சென்றனர். முள்ளி வாய்க்கால் நினைவுகளை என்றும் எம்மாலும் எமது வருங்கால சந்ததியினராலும்
தொடர்வதன் மூலமே எமது இன விடுதலையை வென்று எடுக்கும் ஆறாத அவாவினை பாதுகாக்க முடியும்.

கடந்த வருட காலம் வரை டுசுல்டோர்வ் நகரத்தின் பாரளுமன்ற முன்றலில் எமது எழுச்சிப்பேரணி
நடைபெற்று வந்தது. இந்த வருடம் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 18.05.2020
திங்கட்கிழமை எட்டு இடங்களில் யேர்மனிய சட்ட ஒழுங்குகளுக்கு அமைய நினைவேந்தல்
நடைபெற்றது.

ஸ்ருட்காட் நகரத்தில் 16.00 மணியளவில் மே 18 நினைவேந்தல் நிகழ்வை நூற்றுக்கணக்கான மக்களுடன் உணர்வுப் பூர்வமாக நடைபெற்றது.
முள்ளிவாய்க்காலில் புதையுண்ட மக்களையும் விதைக்கப்பட்ட மாவீரர்களையும் நினைவு கூர்ந்து    திருமதி. சசிகலா குலசிங்கம் அவர்களால் ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. தொடர்ந்து.


திரு. எடின் பரோ விஜி மற்றும் திருமதி. கஜிதா குகணேஸ்வரன் ஆகிய இருவரும் மலர் மாலை
அணிவித்தனர். இதன் பின்னர் அகவணக்கம் இடம்பெற்றது.

இதனைத்தொடர்ந்து மக்கள் சுடர் மற்றும் மலர் வணக்கம் செலுத்தினார்கள். கோரோனா
தாக்கத்தின் மத்தியிலும் அதன் விதிமுறைகளுக்குட்பட்டு சிறுவர்களும் கலந்து கொண்டது
உணர்வுப் பூர்வமாக இருந்தது. யேர்மனியர்களும் வெளிநாட்டவர்களும் அங்கு நின்று
அவதானித்ததை பார்க்கக்கூடியதாக இருந்தது. இறுதியாக மக்கள் எல்லோரும் தமது உணர்வை
வெளப்படுத்தி பின்னர் கலைந்து சென்றனர்.