ஒட்டாவா தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் சுரேந்திரன் விபத்தில் சாவடைந்தார்!

300 0

கனடா ஒட்டாவா நகரில் ஏற்பட்ட வாகன விபத்தில் சுரேந்திரன் தம்பிராஜா (52) என்பவர் உயிரிழந்துள்ளதாக கனடாச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

கனடாவிலுள்ள ஈழத்தமிழ் சமூகத்தின் மத்தியில் ஒட்டாவா சுரேஷ் என்ற பெயரில் நன்கறியப்பட்டவர் அவர், பல அமைப்புக்களின் முக்கிய பொறுப்புக்களிலும் இருந்து தீவிரமாகச் செயற்பட்டவர்.

நேற்று முன்தினம் (15) மாலை ஒட்டாவா மாநகருக்கு அருகில், ஸ்மித்ஸ் நீர்வீழ்ச்சிக்கு தெற்கே மின் கம்பம் ஒன்றுடன் மோதிய மற்றொரு ஓட்டுநருக்கு உதவ தனது வாகனத்தை நிறுத்திய சுரேஷ், உதவி செய்துகொண்டிருந்த வேளை 3வது வாகனம் மின் கம்பத்துடன் மோதியது. இதில் மின் கம்பியின் மீது ஏறி உயரழுத்த மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்தில் இறந்துவிட்டதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுரேஷ் உதவிக்கு சென்ற -முதலாவதாக விபத்தில் சிக்கிய சாரதி ஒருவர் சிறு காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல் துறை  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒட்டாவா சுரேஷ் என எல்லோராலும் அறியப்பட்ட 5 பிள்ளைகளின் தந்தையான சுரேஷ், யாழ்ப்பாணம் புத்தூரை பிறப்பிடமாக கொண்டவர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஒட்டாவாவில் வசித்தும் வருகிறார். ஓட்டவா நகரில் உள்ள மக்களின் தொடர்புகளை பேணுதலும் பல அரசியல் வேலை திட்டங்களயும் தமிழ்த் தேசியத்திற்க்காக முன்னெடுத்தவர்.

கணனித் துறையில் சிறந்து விளங்கிய இவர் பன்முக ஆளுமையை கொண்டிருந்தார்.

ஒட்டாவா தமிழர் ஒருங்கிணைப்பு குழு (TCC) பொறுப்பாளராகவும், தாயக செயட்பாடுகளில் 1980களில் இருந்து 2009 வரை தனது முழுப்பங்களிப்பினையும் வழங்கியவராவார்.

2004ம் ஆண்டு டொரோண்டோவில் பிரமாண்டமாக குயின்ஸ் பார்க் முன்றலில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வை முற்றுமுழுதாக இவரே ஒழுங்கமைத்திருந்தார்.

2000 ஆண்டு இறுதியில் கனடிய தமிழ் காங்கிரஸ் (Canadian Tamil Congress), மற்றும் டொரோண்டோவில் இயங்கிவரும் TVI, CMR வானொலி ஆகியவற்றின் ஆரம்ப உருவாக்கத்தில் சுரேஷின் பங்களிப்பு பெரியது.

ஈழ போராட்டத்தின் பதிவுகளை தனது கமரா ஒவியம் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். புகைப்படக்கலையில் சிறந்து விளங்கிய இவர், 2002 – 2006 சமாதான காலப்பகுதியில் வன்னி சென்று புலிகளின் தலைவர், படையணிகளை புகைப்பட தொகுப்புகளாக உருவாக்கியிருந்தார்.

ஒட்டாவா, கால்ரன் பல்கலைக்கழகங்களில் கல்விபயின்ற மாணவர்களை தமிழ் தேசிய செயற்பாடுகளில் ஆர்வம் கொள்ள வைத்திருந்தார். கடந்த பலவருடங்களாக ஒட்டாவாவில் கட்டுமான துறையில் ஈடுபட்டு வந்தார்.