அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஓய்வுபெற்ற ராணுவ லெப்டினென்ட் மைக்கேல் ஃபிளின் என்பவரை அந்நாட்டின் அதிபராக விரைவில் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி அந்நாட்டின் 45-வது அதிபராக பதவியேற்கவுள்ளார்.
தனது தலைமையிலான மந்திரிசபை மற்றும் நாட்டின் முக்கிய துறைகளுக்கான தலைமை அதிகாரிகளை தேர்வு செய்யும் பணியில் தற்போது மும்முரமாக ஈடுபட்டுவரும் டிரம்ப், தினந்தோறும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அவ்வகையில், அமெரிக்க பாதுக்காப்புத்துறை புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவரான மைக்கேல் ஃபிளின் என்பவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்துள்ளார். டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான மைக்கேல் ஃபிளின், இதற்கு முன்னர் தேசிய பாதுகாப்பு தொடர்பாக டிரம்ப்புக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வந்ததுடன், அவரது தேர்தல் பிரசார கூட்டங்களில் ஆரம்பநிலை பேச்சாளராக இருந்து வந்துள்ளார்.
இந்த பதவியை மைக்கேல் ஃபிளின் ஏற்றுக் கொள்வாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப்புக்கு நெருக்கமான வட்டாரங்கள், ‘நாட்டுக்கு சேவையாற்ற அமெரிக்காவின் அதிபர் உங்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கும்போது, அதற்கு ஒரே பதில் (எஸ், ஸார்) மட்டுமே உண்டு’ என்று தெரிவித்துள்ளன.

