உத்தர பிரதேசத்தில் லாரி விபத்து- புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் பலி

275 0

உத்தரபிரதேச மாநிலம் அவ்ரயாவில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஊரடங்கால் வெளிமாநிலங்களில் தங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். வருமானம் இல்லாததால் சொந்த ஊர்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர். சரியான போக்குவரத்து வசதி இல்லாத நிலையில், நடைபயணமாகவோ அல்லது லாரிகள் மூலமாகவோ செல்லும்போது பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இந்நிலையில் ராஜஸ்தானில் தங்கி வேலை பார்த்த வெளிமாநில தொழிலாளர்கள் லாரி மூலம் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சென்ற லாரி, இன்று அதிகாலையில் உத்தரபிரதேச மாநிலம் அவ்ரயாவில் சென்றபோது மற்றொரு லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 22 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தில் சிக்கிய தொழிலாளர்களில் பெரும்பாலானோர் பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.