வாள்வெட்டில் ஒருவர் பலி : மட்டக்களப்பில் சம்பவம்

304 0

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி வேலூர் பிரதேசத்தில் இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்காகி ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (15.05.2020) இரவு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கல்லடி வேலூர் 4 ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான 29 வயதுடைய இராமசந்திரன் மனோரதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்தந பர் சம்பவதினமான நேற்று இரவு வீட்டில் இருந்துள்ள நிலையில் சுமார் 6.30 மணியளவில் அவருடைய கையடக்க தொலைபேசிக்கு வந்த அழைப்பையடுத்து அவர் அந்த அழைப்புக்கு பதில் அளித்தவாறு வீட்டின் பின்பகுதியான வெற்று காணிப் பகுதிக்குச் சென்றுள்ளார்.

இதன் பின்னர் சுமார் அரை மணித்தியாலயத்தின் பின்னர் ; ஒரு சத்தம் கேட்டது அதனையடுத்து அங்கு உறவினர்கள் சென்றபோது தலையால் இரத்தம் வழிந்த நிலையில், கீழே வீழ்ந்து உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.