இரு சகோதரிகளுக்கு நீதி கோரி மன்னாரில் போராட்டம்

445 0

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, பரப்பான் கண்டல் சந்தியில் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இடம் பெற்ற விபத்தில் சகோதரிகள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை செலுத்தி வந்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு உடனடியாக மன்னார்  பதில் நீதவான் முன்னிலையில்  ஆஜர் படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த இரு சகோதரிகளின் மரணத்துக்கும் நீதி கோரி குடும்ப உறவுகள்  இன்று (15)  வெள்ளிக்கிழமை காலை 8.45 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைதியான முறையில் சமூக இடை வெளிகளை பேணி, பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கண்டன போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

எனினும் சம்பவ இடத்துக்கு சென்ற மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மக்கள் ஒன்று கூடி இவ்வாறான போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என்றும் அங்கிருந்து உடனடியாக செல்லுமாறு கோரிக்கை விடுத்தார்.

எனினும், அவர்கள் அவ்விடத்தில் இருந்து செல்லாத நிலையில் பொலிஸாரின் உதவியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என சுமார் 16 பேர், மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதோடு, இவ்வாறான போராட்டங்களை தற்போதைய சூழ் நிலையில் செய்ய முடியாது என எச்சரித்ததோடு, பிரச்சினை தொடர்பில் மன்னார் நீதிமன்றத்தின் உதவியை நாடுமாறு கோரிக்கை விடுவித்தனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் அஞ்சல் அதிபராக கடமையாற்றிய சந்தியோகு ரெறன்சியா(வயது-25), வைத்தியசாலை பெண் பரிசோதகராக கடமையாற்றும்  லின்ரா கோபிநாதன்(வயது-42) இரண்டு பிள்ளைகளின் தாய் ஆகிய இரு சகோதரிகளும் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி மதியம் மன்னார் பரப்பான் கண்டல் வீதியூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இரண்டு சகோதரிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்தியவர் கைது செய்யப்பட்டு பின்னர் மன்னார் பதில் நீதவான் முன்னிலையில்  ஆஜர் படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

விபத்தில் உயிர் இழந்த சகோதரிகளின் சடலம் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னரே விபத்தை ஏற்படுத்திய நபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

உயிரிழந்த இரு சகோதரிகளுக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும்.இப்படியான ஒரு சம்பவம் இனி இடம் பெறக்கூடாது.

பணம் இருந்தால் எதனையும் செய்ய முடியும் என்பதற்காக ஏழைகளுக்கு அநீதி இடம் பெறக்கூடாது.

எனவே குறித்த இரு சகோதரிகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே குடும்ப உறவினர்களாகிய நாங்கள் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்தோம்” என்றனர்.