யாழ். நல்லூர் பகுதியில் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட கும்பல்

267 0

யாழ்ப்பாணம் நல்லூர் முதிரைச்சந்தியில் நின்ற பொதுமக்கள் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாசையூரைச் சேர்ந்த கெமி என்று அழைக்கப்படுபவரின் சகோதரனும் அவருடன் சேர்ந்தோருமே இந்தத் தாக்குதலை முன்னெடுத்தனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.  மோட்டார் சைக்கிளில் பயணித்த கும்பல், நாயன்மார்கட்டுப் பகுதியைச் சேர்ந்தோரைத் தேடி முதிரைச் சந்திக்கு வந்துள்ளது.

அங்கு தேடி வந்தோர் இல்லாத நிலையில் வீதியில் நின்ற பொதுமக்கள் மீதும் அவர்களது உடமைகளான மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டி மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

கும்பல் இரும்புக் கம்பிகள், குழாய்கள் சகிதமே தாக்குதலை மேற்கொண்டுள்ளது. அதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.  சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக யாழ்ப்பாணம் பொலிஸார் கூறினர்.