சிறிலங்கா ரீதியில் 5,700 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை

310 0

சிறிலங்கா போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5,700 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) முதல் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்.

இந்நிலையில், அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் நலனைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றின் ஆபத்து அதிகளவில் இல்லாத 21 மாவட்டங்களில் சுமார் 3,000 பேருந்துகள் சேவையில் ஈடுபடும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதேவேளை, மேல் மாகாணத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் 2,700 பேருந்துகள் சேவையில் ஈடுபடும் எனவும் அந்த சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, மறு அறிவித்தல் வரும் வரையில் நீண்ட தூர மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்துச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.