மே, ஆறாம் நாள் நினைவில் முள்ளிவாய்க்கால்!

607 0

மே, ஆறாம் நாள் நினைவில் முள்ளிவாய்க்கால்!
*******

எங்கோ ஓரிடத்தில் கஞ்சியாம் என்றார்கள்…
இருந்த பாத்திரத்தை எடுத்தங்கே அவசரமாய்
இடம்தேடிக் கேட்டலைந்தும்…. இடறுண்டும் ஓடிநிற்க
வீழ்ந்தங்கே வெடிக்கிறது சிங்களத்தின் எமகுண்டும்!

வாடி வதங்கி வரிசையில் நின்ற பலரைத்
தேடிப் பார்த்தும்…. திசையெங்கும் காணவில்லை…
அஞ்சுதற்குள்ளும் தெய்வமாய் நின்றங்கே
கஞ்சி வார்த்தார் கரங்களையும் காணவில்லை!

குடல் கேட்ட பசியதற்கோ உணவென்று ஆகமுன்னே
உடல் சிதறிப் பலியான உறவுகள்தான் எத்தனையோ!!
கடல் தாண்டிக் கால்போக வழியேதும் இல்லையென்று
திடல்மீது பிணமான உறவுகள்தான் எத்தனையோ!!

உலைகொதித்து இறக்குமந்த அரைமணி அதற்குள்ளே
தலைமூடிக் குனிந்தெழும்பும் தடவைகள்தான் எத்தனை…
இரைதேடிப் போவதற்கு அங்கேது இயல்பு நிலை
தரைமூடிக் கிடந்தனவே சிதைவாக உடலங்கள்!

யார் கண்டார்? எவர் கேட்டார்?
அது முள்ளிவாய்க்கால்
மே ஆறாம் நாள்.

-வன்னியூர் குரூஸ்-