போரின்போது தண்டுவடம் பாதித்தும் சாதித்த முல்லைத்தீவு மாணவிகள் இருவர்!

297 0

போர்க்காலத்தில் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தினைச் சேர்ந்த மாணவிகள் இருவரே இவ்வாறு சாதனை புரிந்துள்ளனர்.

தண்ணீரூற்று மேற்கு, முள்ளியவளையைச் சேர்ந்த கெங்காதரன் பவதாரணி, நாவலர் வீதி, முள்ளியவளையைச் சேர்ந்த மதியழகன் விதுர்சிகா ஆகிய இருவரும் 2009 ஆம் ஆண்டு இருவேறு சம்பவங்களின் போது காயமடைந்திருந்தனர்.

கெங்காதரன் பவதாரணி முள்ளிவாய்க்கால் பகுதியில் எறிகணைத் தாக்குதலில் சிக்கி முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட நிலையில் எழுந்து நடமாட முடியாத நிலையில் சக்கர நாற்காலியில் நடமாடினார்.

விதுர்ஷிகா அதேவேளை இறுதிப்போர் நெருக்கடியைக் கடந்து இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் போன பின்னர் வவுனியா செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி நலன்புரி முகாமில் தங்கியிருந்தபோது இராணுத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து தண்டுவடம் பாதிக்கப்பட்டிருக்கின்றார்.

பவதாரணியும் விதுர்ஷிகாவும் சக்கர நாற்காலியில் நடமாடியபோதிலும் கல்வியிலே சிறந்து விளங்கியிருக்கின்றார்கள். பவதராணி 8A, B விதுர்ஷிகா – 6A,B, 2C என பெறுபேறுகளைப் பெற்று தாம் சாதனையாளர்கள் என்பதை நிரூபித்துள்ளார்கள்.