5 வினாடிகளில் கொரோனாவை கண்டறியும் மென்பொருள் – ஐ.ஐ.டி. பேராசிரியர் உருவாக்கினார்

277 0

ஒருவரின் எக்ஸ்-ரேவை பயன்படுத்தி, அவருக்கு கொரோனா உள்ளதா? என்பதை 5 வினாடிகளில் கண்டறிய முடியும் என ஐ.ஐ.டி. பேராசிரியர் கமல் ஜெயின் தெரிவித்துள்ளார்.

ரூர்க்கியில் உள்ள ஐ.ஐ.டி.யில் சிவில் என்ஜினீயரிங் பேராசிரியராக பணியாற்றி வருபவர் கமல் ஜெயின். இவர், 40 நாட்களாக பாடுபட்டு, ஒரு மென்பொருளை (சாப்ட்வேர்) உருவாக்கி உள்ளார். அதில், ஒருவரின் எக்ஸ்-ரேவை பயன்படுத்தி, அவருக்கு கொரோனா உள்ளதா? என்பதை 5 வினாடிகளில் கண்டறிய முடியும் என்று அவர் சொல்கிறார்.
தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கோரி அவர் விண்ணப்பித்துள்ளார். மேலும், இதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வுக்கு அனுப்பி உள்ளார்.
அவர் கூறுகையில், “ஒருவரின் எக்ஸ்-ரே படத்தை வைத்து, அவருக்கு நிமோனியா அறிகுறி உள்ளதா என்று இந்த மென்பொருள் சொல்வதுடன், அது கொரோனா வைரசால் வந்ததா அல்லது வேறு பாக்டீரியவால் வந்ததா என்று கூறிவிடும். 5 வினாடிகளில் இப்பணி முடிந்து விடும். ‘பாசிட்டிவ்’ வந்த நோயாளிகள், கூடுதலாக ஆய்வக பரிசோதனை நடத்தி, இதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
இந்த மென்பொருள், பரிசோதனை செலவை குறைப்பதுடன், மருத்துவ பணியாளர்களுக்கான கொரோனா ஆபத்தை தவிர்க்கிறது” என்றார்.