இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் சுகாதார பிரச்சனையினை முன்வைத்து இன்று (24) காலை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமையினையடுத்து விரைந்து செயற்பட்ட சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பினை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
கொரோனா தொற்று அச்சம் காரணமாக பேரூந்துகள் அனைத்தும் தண்ணீரினால் கழுவிய பின்னர் தொற்று நீக்கும் மருந்துகள் தெளித்து அதன் பின்னரே சேவையில் ஈடுபடுகின்றன. இதுவரையிலான காலப்பகுதியில் வவுனியா இ.போ.ச சாலையிலும் இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் இன்று இ.போ.ச வவுனியா சாலையிலுள்ள பேருந்துகள் தொற்று நீக்காமையினால் தாம் சேவையில் ஈடுபடமாட்டோம் என தெரிவித்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் இ.போ.ச வவுனியா சாலைக்கு விரைந்த வவுனியா பொது சுகாதார பரிசோதகர்கள் உரிய அதிகாரிகளுடன் (இ.போ.ச) கலந்துரையாடி பேரூந்துகளை தொற்று நீக்கும் மருந்துகள் தெளித்து சுத்தப்படுத்தி உடனடியாக சேவையில் ஈடுபடுத்துமாறு தெரிவித்தமையினையடுத்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காலை 11.00 மணியுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
பேரூந்துகள் தொற்று நீக்கும் மருந்துகள் தெளித்து சுத்தப்படுத்தியதன் பின்னர் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

