அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க அதிமுக ரூ. 8.60 லட்சம் வழங்கல்

315 0

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்பட்டு வருகின்றது.

விருதுநகர் மாவட்டத்தில் முழு அடைப்பு காரணமாக ஏழைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தினக்கூலி பணியாளர்கள் வெளி மாநிலத்தினர் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் உணவின்றி கஷ்டப்படாமல் இருக்க அனைத்து நகராட்சியிலும் செயல்படும் 8 அம்மா உணவகங்கள் மூலம் மூன்று வேளைகளிலும் உணவு வழங்கப்படுகிறது.

மேற்படி 8 அம்மா உணவகங்களில் 23.4 .2020 முதல் 3.5.2020 முடிய 11நாட்களுக்கு மூன்று வேளைகளிலும் உணவு வழங்குவதற்கான செலவுத்தொகை நாள் ஒன்றுக்கு ரூ.78 ஆயிரம் வீதம் 11 நாட்களுக்கு மொத்தம் 8 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை விருதுநகர் மாவட்ட அதிமுக பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் வழங்கினார்.

அப்போது அமைச்சர் அளித்த பேட்டியில், “சமூக ஆர்வலர்கள் பொதுநல விரும்பிகள் தொழிலதிபர்கள் ஆகியோர்களை ஒருங்கிணைத்து பொது மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பணியாற்றி வருகின்றனர். அம்மா உணவகம் மூலம் அனைவருக்கும் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டுவருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்க்கு எடப்பாடி அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் விழிப்புணர்வும் தான் காரணம் மருத்துவர்கள் இறைவனின் தொண்டர்கள் என முதல்வர் கூறியுள்ளார்.

மருத்துவர்கள் உயிரிழந்தால் 10 லட்சத்திலிருந்து 50 லட்சமாக உயர்த்தி உள்ளார் எங்களுடைய அதிகாரிகள் இரவு பகல் பாராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கரோணா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை நடுநிலையாளர்கள் ஊடகவியலாளர்கள் அனைவரும் பாராட்ட வேண்டும் பாராட்ட மனமில்லை என்றாலும் குறை சொல்ல கூடாது. குறைகளை மட்டுமே கூறிக்கொண்டே இருந்தால் நிறைகள் கண்ணுக்கு தெரியாது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஒரு மாத காலமாகியும் தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை அந்த அளவு அரசு மக்களை பார்த்துக் கொள்கிறது.

வெளிப்படையான நிர்வாகத்தை தமிழக முதல்வர் அளித்து வருகிறார் உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் அச்சப்படும் அளவிற்கு வெளிப்படையான நிர்வாகத்தை எடப்பாடி பழனிச்சாமி வழங்கி வருகிறார்.

அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆர்வத்தோடு பணியாற்றிய காரணத்தினால் மருத்துவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் தெய்வத்திற்கு சமமானவர்கள் அனைவரையும் மதிக்கின்ற நாடு தமிழ்நாடு பிரச்சினையை உண்டாக்க கூடியவர்கள் பற்றி கவலை இல்லை பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ” என்றார்.