மக்களை ஆபத்தில் தள்ளப் போகின்றதா கோத்தபாய அரசு

341 0

நாட்டின் சுகாதார துறையினரின் ஆலோசனைகளை புறம் தள்ளி கோத்தபாய அரசு தேர்தலுக்காக மக்களை ஆபத்தில் தள்ளப் போகின்றதா என ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எமுப்பியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக சுகாதார திணைக்களத்தின் அறிவுரைகளை கேட்காமல் அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்காக அவசரமாக செயற்பட்டு வருகின்றது.

இது மக்களுக்கு பாதாகத்தன்மையை ஏற்படுத்தலாம் என்பதுடன் பாரிய விளைவுகளை உருவாக்கலாம்.
இலங்கையில் 250க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7 பேர் வரையில் உயிரிழந்தனர். இவ்வாறான நிலையில் கொரோனா அச்சுறுத்தலானது தொடர்ச்சியாக நாட்டில் இருப்பதாக சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர்.
எனினும் அரசாங்கம் அவர்களின் கருத்துக்களை செவிமடுக்காது தேர்தலை நடத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் நடைபெற உள்ள தேர்தலானது ஜனநாயகமாக நடைபெறுமா? என்ற கேள்வி உள்ள நிலையில் கருத்து சுதந்திரம் வெளியிட முடியாத வகையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. ஆகவே அரசாங்கம் தேர்தல் காலங்களில் மக்களுக்கு தமது கருத்துக்களை பகிர அரசியல் கட்சிகளுக்கு சந்தர்ப்பங்கள் வழங்க வேண்டும்.எனவே அரசாங்கம் இவை தொடர்பில் ஆராய்ந்து மக்கள் நலனை முன்னிறுத்தி முதலில் செயற்பட வேண்டும்.

அதுமட்டும் அல்லாமல் நாட்டில் பல மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு சட்டங்கள் தளர்த்தப்பட்டு உள்ளன தளர்த்தப்படும் இடங்களில் அச்சுறுத்தல் ஏற்படாதா மக்களுக்கு மீண்டும் தாக்கங்களை செலுத்தாத அதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்து உள்ளதா என்பதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சுகாதாரத் துறையினரின் கருத்தை இலங்கை அரசாங்கம் கேட்டு செயற்பட வேண்டும். அதனை விடுத்து தேர்தலை எவ்வாறாயினும் நடத்திவிட வேண்டும் என்ற நோக்கில் செயற்படக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோத்தபாய அரசு இரண்டு காரணிகளை வைத்தே எப்படியும் தேர்தலை நடத்த வேண்டும் என்று விடாப்பிடியாக உள்ளதுடன் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிரித்துள்ளனர்.

இதனை சாதகமாக்கி வாக்கினை அதிகமாக பெற முடியும். மற்றையது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தை அரசாங்கம் வெற்றிகரமான முறையில் கட்டுப்படுத்தினோம் என்ற பிரச்சாரம் போன்றவற்றை கருத்தில் கொண்டே அரசு தேர்தலில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றதாக ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.