அக்கரைப்பற்றில் தொற்றுக்குள்ளானவரின் மனைவிக்கும் வைரஸ் தொற்று!

370 0

அம்பாறை, அக்கரைப்பற்றில் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளனமை இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.

அம்பாறையில் கொரோனா வைரஸ் தொடர்பான நிலைவரம் குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்த அவர் கூறுகையில், “எமது பிராந்திய சுகாதாரப் பணிமனைக்கு உட்பட்ட அக்கரைப்பற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒருவர் குறித்த நோய் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டு பொலனறுவை பகுதியில் உள்ள ஆதார வைத்தியசாலையின் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

அவர், கட்டார் நாட்டுக்குச் சென்று நாடு திரும்பிய நிலையில் தொற்று அறியப்பட்ட நிலையில் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், அவரது குடும்ப அங்கத்தவர்கள் பத்துப்பேர் பொலன்னறுவையில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் சிறப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதில் எமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தொற்றுக்குள்ளானவரின் மனைவிக்கு தொற்றுள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த நோயாளியின் மனைவி தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மேலதிக சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஏனைய, ஒன்பது பேரில் 7 பேருக்கு இந்த நோய் இல்லை என்ற நெகற்றவ் பரிசோதனை அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளது. தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தல் முகாமில் சிகிச்சை தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

எனினும் ஏனைய இருவரின் சிகிச்சை முடிவுகள் இதுவரை கிடைக்கவில்லை. அதாவது அக்கரைப்பற்றில் தொற்றுக்குள்ளானவரின் வாகன சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோரின் பரிசோதனை முடிவுகளே இன்னும் கிடைக்கவில்லை.

மேலும், அடையாளம் காணப்பட்ட மனைவியுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் 55 பேர் மீதும் விசேட கவனத்தைச் செலுத்தி வருகின்றோம்” என்று குறிப்பிட்டார்.