விபத்தில் உயிரிழந்த இரு சகோதரிகளின் உடல்களும் மக்களின் அஞ்சலியுடன் நல்லடக்கம்!

342 0

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,பரப்பாங்கண்டன் பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (09.04.2020) மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சகோதரிகளான இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மன்னாரில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிலும், முருங்கன் பிரதான வீதியாக மன்னார் நோக்கி வந்த பிக்கப் ரக வாகனமும் மோதியதில் மோட்டார் சைக்கிலில் பயணித்த குறித்த இரு பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த இரு பெண்களும் உடன் பிறந்த சகோதரிகளான சந்தியோகு லிண்டா(வயது 40), மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றியவர் என்பதோடு, ;மற்றையவர் சந்தியோகு டெரன்சி (வயது-25) மன்னார் அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றியவர் என்பதுவும் குறிப்பிடதக்கது

குறித்த இருவரும் மன்னாரில் இருந்து கட்டையடம்பன் பகுதியில் உள்ள அவர்களுடைய வீட்டிற்கு மோட்டார் சைக்கிலில் பயணித்த போதே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு குறித்த இரு சடலங்களும் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்டது.

குறித்த பிரதேச மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளதோடு,இறுதி நல்லடக்கத்தின் போது பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளமையும் குறிப்பிடதக்கது.