சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு சிறப்பு விமானம்

308 0

சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு 110 பேருடன் சிறப்பு விமானம் புறப்பட்டு சென்றது.அமெரிக்க நாட்டில் இருந்து பயணிகள் சிலர் இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்தனர். பின்னர் அவர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றி வந்தனர். இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வெளிநாட்டு விமானங்கள் இந்தியாவுக்கு வந்து செல்லவும் மத்திய அரசு தடை விதித்தது.இதனால் சுற்றுலா வந்த அமெரிக்க பயணிகள், மீண்டும் தங்கள் நாட்டுக்கு திரும்பிச்செல்ல முடியாமல் தவித்தனர்.

இந்தநிலையில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் சுற்றுலா வந்த பயணிகளை மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள அமெரிக்க நாட்டு பயணிகளை சிறப்பு விமானம் மூலம் அழைத்துச் செல்ல மத்திய அரசும் அனுமதி அளித்தது.

இதையடுத்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து அமெரிக்காவுக்கு மும்பை வழியாக சிறப்பு விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 110 பயணிகள் சென்றனர். மும்பை சென்று அங்குள்ள அமெரிக்கர்களும் சேர்த்து அழைத்து செல்லப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.