கட்டுக்குள் வருகிறது கொரோனா- சீனாவில் முதல் முறையாக புதிய உயிரிழப்பு இல்லை

216 0

சீனாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை என்று அந்நாட்டு தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில் தான் கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் (கோவிட் 19) முதன் முதலாக வெளிப்பட்டது.
அப்போது முதல் சீனாவை கொரோனா வைரஸ் உலுக்கத்தொடங்கியது. கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றதால், சீனா வைரசைக்கட்டுப்படுத்த திண்டாடியது. பின்னர் சுதாரித்த சீனா, ஹூபெய் மாகாணத்தை முடக்கியது. சீனாவின் தொடர் நடவடிக்கைகளால், தற்போது கணிசமாக கொரோனா அங்கு கட்டுக்குள் வந்துள்ளது.
சீனாவில் புதிதாக உள்ளூரில் இருந்து கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று கடந்த சில நாட்களாகவே அந்நாடு கூறி வருகிறது. எனினும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சீனாவில் கொரோனா உக்கிரமாக பரவத் தொடங்கி உயிரிழப்புகள் பதிவானதற்கு பிறகு, நேற்று முதல் முறையாக அங்கு கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை.  ஜனவரி முதல் சீனாவில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு நிகழத்தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் தற்போது வெளிநாடுகளில் இருந்து வந்த நபர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களால் கொரோனா தொற்று பரவி வருவது குறிப்பிடத்தக்கது.