கொரோனா தொற்று- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதி

215 0

கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரொனா வைரஸ்,  உலகம் முழுவதும் சுமார் 208 நாடுகளில் வியாபித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கடும் தாக்கத்தை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.  இந்த நோயினால்  சுமார் 48 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 6 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பிரிட்டனின் பெரும் தலைவர்களையும் தாக்கியது.
இளவரசர் சார்லஸ் வைரஸ் தொற்றுக்கு ஆளானார். சிகிச்சைக்கு பிறகு தற்போது குணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் (வயது 55) கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது கண்டறியப்பட்டது.
உடனடியாக அவர் பிரதமர் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார். 10 நாட்களுக்கு பின்னர் மீண்டும் அவருக்கு நோயின் அறிகுறி தென்பட்டதால் அவர், கூடுதல் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரசுடன் போராடி வரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் குணமடைய வேண்டும் என அமெரிக்கா சார்பில் அதிபர் டிரம்ப் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.