ஊசுடு ஏரியில் உள்ளூர் பறவைகள் வருகை அதிகரிப்பு-சாதாரணமாக திரியும் சிறு வனவிலங்குகள்

217 0

கரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மேம்பாட்டால் ஊசுடு ஏரியில் உள்ளூர் பறவைகள் வருகை அதிகரித்துள்ளது.

போக்குவரத்து இல்லாததால் அங்குள்ள குறு காடுங்களில் வசிக்கும் முள்ளம்பன்றி, கீரிப்பிள்ளை,உடும்பு,காட்டுபூனை சாதாரணமாக அப்பகுதியில் சுற்றி திரிகின்றன.
புதுச்சேரியின் மிக பெரிய ஏரியான ஊசுடு ஏரி தமிழகம் மற்றும் புதுச்சேரியை இணைத்து 750 ஏக்கரில் அமைந்துள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த பறவைகள் சரணாலயம் மற்றும் படகு துறை மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லை.வாகனங்கள் ஏதும் ஓடாத காரணத்தால் பூரண அமைதி நிலவுகிறது. இப்பகுதியிலுள்ள தொழிற்சாலைகள் இயங்காத காரணத்தினாலும், வாகனங்கள் நிறுத்தத்தினாலும் புகையின்றி காற்றின் மாசு குறைந்துள்ளது..

தற்போது இம்மாற்றத்தினால் ஊசுடு ஏரியில் நடந்துள்ள மாற்றம் தொடர்பாக விவசாயிகள் தரப்பில் கூறுகையில், “தற்போது ஊசுடு ஏரியில் நீர்சுத்தமாக இருக்கிறது.மீன்களும் நல்ல இன பெருக்கம் செய்துள்ளன. இதனால் உள்ளூர் பறவைகளான நாம கோழி,நீர் கோழி,புள்ளி மூக்கு வாத்து,மஞ்சள் நாரை, போன்றவையின் வரத்து அதிகமாகியுள்ளது.

இவை மட்டுமல்லாது ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள காட்டு பகுதியில் வாழும் முள்ளம்பன்றி, கீரிப்பிள்ளை,உடும்பு,காட்டுபூனை தொடங்கி காட்டு முயல் ஆகியவை இயல்பாக இப்பகுதியில் சுற்றுவதை நீண்ட நாட்களுக்கு பிறகு காண முடிகிறது” என்று குறிப்பிட்டனர்.

சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் கூறுகையில், “இயற்கை சூழல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிறு வனவிலங்கள், பறவைகள் இயல்பாய் மகிழ்வுடன் வாழ்வை நேரடியாக காண முடிகிறது.

சிறுவிலங்களும் இயல்பாய் வாழ மாசுக்கட்டுப்பாட்டை நாம் நேரடியாக கடைப்பிடிப்பது அவசியம். ஊரடங்கு நிறைவடைந்தாலும் வாரம் ஒரு நாள் வாகனத்தை பயன்படுத்துவதை நிறுத்தினால் சுற்றுச்சூழல் நிச்சயம் மேம்படும். அத்துடன் தேவையில்லாமல் வாகனத்தை இயக்குவத்தையும் இனி நிறுத்துவது சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு உதவும்” என்றனர் அக்கறையுடன்.