600 நகைகடை அதிபர்களுக்கு கலால் வரித்துறை சம்மன்

325 0

201611120558461648_over-600-jewellers-asked-to-give-details-of-gold-sales_secvpfசென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட நகைகடை உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ள கலால் வரித்துறை அதிகாரிகள், கடந்த 4 நாள் விற்பனை விவரங்களை அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு உள்ளதால், பெரும் செல்வந்தர்கள் பலர் தாங்கள் வைத்துள்ள கணக்கில் வராத தொகையை செலுத்தி நகைகள் வாங்குவதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய கலால் வரி உளவுப்பிரிவு இயக்ககம் நகைகடைகளுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த 7-ந் தேதி முதல் நேற்று வரையிலான 4 நாள் விற்பனை குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு அதில் உத்தரவிடப்பட்டு உள்ளது.

சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், லக்னோ, ஐதராபாத், விஜயவாடா, பெங்களூரு, நாசிக் உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள 600-க்கும் மேற்பட்ட நகைகடைகளுக்கு இவ்வாறு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் ஜூவல்லரிகள் மற்றும் நகை உற்பத்திக் கூடங்களுக்கு அதிகாரிகள் நேரடியாக சென்றும் இந்த சம்மனை வழங்கி வருகின்றனர்.

இந்த நகைகடைகளில் ஏற்கனவே இருப்பில் வைக்கப்பட்டு இருந்த தங்கம் மற்றும் நகைகள் குறித்த தகவல்களும், அதில் கடந்த 4 நாட்களில் விற்பனையான நகைகள் மற்றும் மீதமுள்ள கையிருப்பு குறித்த விவரங்களும் கேட்கப்பட்டு உள்ளது. அத்துடன் நகைகள் வாங்கிய வாடிக்கையாளர்களின் ‘பான் கார்டு’ விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இந்த விசாரணையின் போது ‘பான் கார்டு’ வாங்காமல் நகை விற்பனை செய்யப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நகைகடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த நடவடிக்கை பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் அவர்கள் கூறினர்.