கொரோனா வைரஸ் பாதித்த பகுதிகளில் பணி – சீனாவில் சமூக நலப்பணியாளர்கள் 53 பேர் பலி

260 0

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய 53 சமூக நலப்பணியாளர்கள் வைரஸ் தாக்கி பலியாகி உள்ளனர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது ஒட்டுமொத்த உலகையும் தனது கைக்குள் வைத்திருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகள் உள்பட 101 நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.

சீனாவில் கொரோனா வைரசுக்கு மேலும் 22 பேர் பலியாகி விட்டனர். இதன்மூலம் அங்கு மொத்த பலி எண்ணிக்கை 3,119 ஆனது. அங்கு 40 பேர் புதிதாக இந்த தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். அங்கு கொரோனா பாதித்த பகுதிகளில் பணியாற்றிய 53 சமூக நலப்பணியாளர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். இது மக்கள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளோரின் எண்ணிக்கை தற்போது 80,735 ஆக இருந்தாலும், புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளது. எனவே அங்கு இந்த நோய்க்காக அமைக்கப்பட்ட தற்காலிக ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்த வைரசின் பிறப்பிடமான உகான் நகரில் 11 ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டு உள்ளன.

சமூக நலப்பணியில்

அதேநேரம் சீனாவுக்கு வெளியே இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து விட்டது. வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையும் 545-ஐ எட்டிவிட்டது. வைரஸ் பரவலின் வீரியத்தால் நியூயார்க், வாஷிங்டன், கலிபோர்னியா உள்ளிட்ட 8 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் குடியரசு கட்சி எம்.பி.யான டெட் குரூஸ், கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்த நபர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. எனவே டெட் குரூசும் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கண்காணிப்பில் இருப்பதாக அறிவித்து உள்ளார்.

இதற்கிடையே கொரோனா நோயாளிகளுடன் சான் பிரான்சிஸ்கோவில் நிறுத்தப்பட்டு உள்ள அமெரிக்க கப்பலில் இருந்து பயணிகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் நேற்று தொடங்கின. இந்த கப்பலில் இருக்கும் கனடா நாட்டவர்களை மீட்டு வர அந்த நாடு சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்ய முடிவு செய்து உள்ளது.

தென்கொரியாவில் புதிதாக 248 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 7,382 ஆக உயர்ந்தது. அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கையும் 51 ஆக அதிகரித்து உள்ளது.

இத்தாலியில் இருந்து சமீபத்தில் அல்பேனியா திரும்பிய தந்தை, மகன் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதன் மூலம், அங்கும் கொரோனா வைரஸ் கால் பதித்துள்ளது. பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்த ஒருவருக்கு வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு மொத்த எண்ணிக்கை 7 ஆனது.

இங்கிலாந்தில் 273 பேருக்கு இதுவரை வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அங்கு முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்ததன் மூலம் பலி எண்ணிக்கை 3 ஆகி விட்டது. போலந்தில் வைரஸ் பாதித்தவர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்திருப்பதாக சுகாதார அமைச்சகம் அறிவித்து உள்ளது.

இவ்வாறு உலக அளவில் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரசின் பிடியில் சிக்கியிருக்கும் நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கையும் 3,800-ஐ எட்டியுள்ளது.

இவ்வாறு வேகமாக பரவும் கொரோனா வைரசின் பீதியால் பல்வேறு நாடுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்தவகையில் பிரான்சில் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்து உள்ளது. அங்கு கொரோனா பலி 19 ஆக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கத்தார் நாடு இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்தவர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய தடை விதித்து உள்ளது. இதைப்போல சவுதி அரேபியாவும் இங்கிலாந்து, குவைத் உள்ளிட்ட 9 நாடுகளுக்கு பயணத்தடை விதித்து உள்ளது. இஸ்ரேல் அரசு தங்கள் நாட்டுக்குள் வரும் வெளிநாட்டினரை தனிமைப்படுத்த பரிசீலித்து வருவதாக பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில் இதுவரை கொரோனா தொற்று கண்டுபிடிக்காத நிலையிலும், அங்கு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் ஏராளமான வெளிநாட்டு தூதர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டதால், பல தூதரகங்கள் நேற்று மூடப்பட்டு இருந்தன.

வங்காளதேசத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் வருகிற 17-ந் தேதி பிரமாண்ட முறையில் நடத்த திட்டமிட்டு இருந்த வங்காளதேச நிறுவனர் ஷேக் முஜிபுர் ரகுமானின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை ஒத்திவைக்க அரசு முடிவு செய்துள்ளது.