துபாய் விமான நிலையத்தில் பயணிகள் சேவை தமிழ் மொழியில் அறிவிப்பு

297 0

201611080838451251_dubai-airport-passenger-service-information-notice-in-tamil_secvpfதுபாய் விமான நிலையத்தில், பயணிகள் சேவை விவரங்கள் தமிழ் மொழியில் அறிவிக்கப்படுகிறது.உலக அளவில் சுற்றுலா நகரங்களில் துபாய் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இங்குள்ள வானுயர்ந்த கட்டிடங்கள் பிரமிக்க வைக்கும். துபாயில் பொழுதுபோக்கு இடங்கள் அதிகம் இருப்பதால் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்து வருகிறது.

துபாய் நகருக்கு உலக நாடுகளில் இருந்தும், தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

துபாய் நகருக்கு கடந்த செப்டம்பர் மாதம் வந்த பயணிகளின் எண்ணிக்கை 70 லட்சத்து 94 ஆயிரத்து 738 பேர் ஆகும். இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டு இதே மாதத்தில் வந்தவர்களை விட 6 லட்சம் பேர் அதிகம்.

அமீரகம் முழுவதும் சுமார் 5 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 20 சதவீதம் பேர் குடும்பத்துடன் வசிக்கிறார்கள். இவர்களை காண்பதற்காக தமிழகத்தில் இருந்து அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அதிகமாக வருகின்றனர்.

இதனால் சென்னையில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் நகருக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. துபாய் சர்வதேச விமான நிலையத்தில் முனையம் 3-ல் இருந்து எமிரேட்ஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

எமிரேட்ஸ் விமான நிறுவனம் தமிழகத்தை சேர்ந்த பயணிகளை கவரும் வகையில், அவர்களுக்கான சேவைகள் பற்றிய விவரங்களை தமிழ் மொழியில் அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.

இந்த அறிவிப்பில் நுழைவு வாயில் எண்ணை குறிப்பிட்டு பயணிகள் விமானத்தில் ஏறும்படியும், பயண டிக்கெட்டை காட்டுவதற்கு தயாராக வைத்துக் கொள்ளவும் பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், எமிரேட்ஸ் விமான சேவையை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி என்பது போன்ற அறிவிப்புகள் தமிழில் ஒலிபரப்பாகின்றன.

ஏற்கனவே அந்த நிறுவனம் அரபி, உருது, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அறிவிப்புகள் வெளியிட்டு வந்தது. தற்பொழுது அந்த வரிசையில் தமிழ் மொழியும் இடம் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் தமிழகத்தை சேர்ந்த பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எமிரேட்ஸ் விமான நிறுவனம் இந்தியாவில் டெல்லி, மும்பை, சென்னை, கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட இடங்களுக்கு விமான சேவையை இயக்கி வருகிறது.

துபாயில் குளோபல் வில்லேஜ் கண்காட்சி தற்போது நடந்து வருகிறது. விரைவில் துபாய் விற்பனை திருவிழா நடைபெற இருக்கிறது. தற்போது இதமான காலநிலை நிலவி வருவதால் தமிழகத்தில் இருந்து துபாய் நகருக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.