ஐ.நா. சபை கூட்டத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு

233 0

வி‌‌ஷத்தை கக்குவது போல வெறுப்பை ஏற்படுத்தும் பேச்சையே பேசுகிறது என்று ஐ.நா. சபை கூட்டத்தில் இந்தியாவுக்கான நிரந்தர துணை தூதர் கே.நாகராஜ் நாயுடு பாகிஸ்தான் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் இந்தியாவுக்கான நிரந்தர துணை தூதர் கே.நாகராஜ் நாயுடு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கா‌‌ஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து பொய் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதை கடுமையாக சாடினார். அவர் கூறியதாவது:-

பாகிஸ்தான் போர்க்குணத்துக்கும், பழிவாங்கும் வழக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து, சாதாரண உறவுகளை மீட்டெடுக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக அந்த நாடு, சர்வதேச சமூகங்களிடம் இருந்து உண்மையை மறைப்பதற்காக குழப்பத்தில் ஈடுபடுகிறது.

மீன் தண்ணீருக்கே மீண்டும் செல்வதைப் போல ஒரு தூதுக்குழுவும் (பாகிஸ்தான் தூதுக்குழு) மீண்டும் வெறுக்கத்தக்க விதத்திலேயே பேசி வருகிறது.

இந்த தூதுக்குழு ஒவ்வொரு முறையும் வி‌‌ஷத்தையே கக்குகிறது. தவறான கதைகளை திரித்துப் பேசுகிறது.

பாகிஸ்தான்

சிறுபான்மையினரை முற்றிலும் அழித்த ஒரு நாடு, சிறுபான்மையினரை பாதுகாப்பது பற்றி பேசுவது மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது.

பாகிஸ்தான் தனது தவறான சொல்லாட்சி கலையை கேட்க இங்கு எவரும் இல்லை என்பதை பிரதிபலிக்க வேண்டும். இயல்பான தூதரக நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த வாரம் ஐ.நா. சபையில் இந்தியாவுக்கான நிரந்தர தூதர் சையத் அக்பருதீன் பேசினார். அப்போது அவர், ‘‘ பாகிஸ்தான் பிரதிநிதிகளால் கூறப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இன்று ஐ.நா.சபையில் நம்பத்தகுந்தவை அல்ல என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்’’ என கூறினார்.

மேலும், ‘‘பாகிஸ்தானின் முயற்சி கவனத்தை திசை திருப்பும் முயற்சி ஆகும். இந்தியா உடனான உறவுகளில் எழக்கூடிய பிரச்சினைகளை எழுப்பவும், தீர்த்துக்கொள்ளவும் இரு தரப்பு வழிமுறைகள் உள்ளன என்பதை நண்பர்கள் சுட்டிக்காட்டியதில் மகிழ்ச்சி அடைகிறோம்’’ எனவும் குறிப்பிட்டார்.