தமிழர் திருநாள் லெஸ்ரர் மாநிலத்தில் தமிழுறவுகளால் வெகுசிறப்பாக பெருவிழாவாக கொண்டாடப்பட்டது. 18-01-2020 சனிக்கிழமை மண்டபம் நிறைந்த மக்களோடு நடைபெற்ற இவ்விழா மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பமானது. மங்களவிளக்கை எம்மவர்களுடன் இணைந்து லெஸ்ரர் நகரசபை உறுப்பினர்களும் நகரசபை துணை முதல்வரும் ஏற்றி வைக்க விழா இனிதே ஆரம்பமானது. பிரித்தானியத் தேசியக்கொடியை தமிழர் நலன்புரிச் சங்கத்தின் பொருளாளர் திரு. கந்தசாமி சங்கரன் ஏற்றி வைக்க எமது தமிழீழ தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் லெஸ்ரர் மாநிலப்பொறுப்பாளர் ஸ்ராலின் ஏற்றிவைத்தார்.
ஆடலும் பாடலுமாக நடைபெற்ற நிகழ்வுகளோடு பேச்சுக்களும் கவிதைகளும் இடம்பெற்றிருந்தன. நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஒவ்வொரு சிறுவர்களின் தனித்திறமைகளும் பார்த்திருந்தவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. பிரான்சிலிருந்து வருகை தந்திருந்த எமது கலைஞர்கள் மன்மதன் பாஸ்கியும் அங்கிள் சிறியும் இணைந்து பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்கவைத்ததோடு சிந்திக்கவும் செய்தனர். தேசியக்கொடிகள் கையேந்தலுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றன.