வடக்கு ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தொண்டர் ஆசிரியர்கள்

242 0

அரச நியமனம் வழங்கக்கோரி வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள், வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்திருந்தனர்.

மாகாணத்தில் நீண்டகாலமாக கடமையாற்றி வருகின்ற நிலையிலும் நியமனம் வழங்கப்படாததைக் கண்டித்தும் நியமனங்களை வழங்க வலியுறுத்தியுமே அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

நியமனத்தை வழங்க கோரி பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கின்றோம். அதிலும் குறிப்பாக வடக்கு மாகாண ஆளுநர்களாக புதிது புதிதாக வருகின்ற பலரையும் சந்தித்துள்ளோம் எனவும் குறித்த தொண்டர் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆகவே தற்போது புதிய ஆளுநராக வந்திருக்கின்றவர் எங்களுக்கான நியமனங்களை உரிய முறையில் விரைவாக வழங்க  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அவர்கள் கோரியுள்ளனர்.

இதேவேளை போராட்டத்தில் தொண்டர் ஆசிரியர்கள் ஈடுபட்டப்போது அலுவலகத்தில்  ஆளுநர் இல்லாத காரணத்தினால் ஆளுநரின் ஊடக செயலாளர் எஸ்.முகுந்தன் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் புதன்கிழமை சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்படுமென வழங்கிய வாக்குறுதியையடுத்து போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.