அமைச்சர் செல்லூர்ராஜூவுடன் மனக்கசப்பா? – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில்

406 0

எனக்கும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர்ராஜூ, ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோருக்கும் இடையே மனக்கசப்பு இருப்பதாக கருதியவர்கள் நிச்சயமாக ஏமாற்றப்படுவார்கள் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.திருமங்கலத்தில் இன்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இன்றைக்கு இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
எடப்பாடி பழனிசாமி

முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமியால் செயல்பட முடியுமா என்று சொன்னவர்கள், இன்றைக்கு இவரால் தான் முடியும் என்று சொல்ல வைத்துள்ளார்.

தமிழகத்தில் 10 பேருக்கு வேலையை பிரித்து கொடுப்பதே சவாலான செயல், இந்த நிலையில் அத்திவரதர் கூட்டத்தையும், ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் சிறு தூசுபடாமல் பார்த்துக் கொண்டோம். பொங்கல் பரிசாக ஒவ்வொரு வீட்டுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்தது சாதனையாகும்.

மக்களோடு தொடர்பு கொண்ட துறை கூட்டுறவு, வருவாய் துறைகள் ஆகும். இன்றைக்கு வருவாய் துறை அமைச்சர் உள்ள துறையில் கூட்டுறவு துறையும் சேர்ந்து இருப்பது சிறப்பானது.

எனக்கும் கூட்டுறவுத் துறை அமைச்சர், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோருக்கும் இடையே மனக்கசப்பு இருப்பதாக கருதியவர்கள் நிச்சயமாக ஏமாற்றப்படுவார்கள். நீண்ட நாட்களாக எங்களுக்கிடையே பிரச்சினை இருந்து வருவதாக பலர் நினைக்கின்றனர். இருந்தாலும் அனைத்தையும் பொருட்படுத்தாமல் வருகிற நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களில் இணைந்து பணியாற்றி வெற்றி பெறுவோம்.

நிர்வாக காரணங்களால் தான் கூட்டுறவுத்துறை அமைச்சரும், வருவாய்த்துறை அமைச்சரான நானும் சில விழாக்களில் கலந்து கொள்வதும் நிராகரிப்பதுமே தவிர, எந்தவித மனக்கசப்பும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.