மீளுருவாக்கம் செய்யப்பட்ட பருத்தித்துறை தெருமூடி மடம் வைபவ ரீதியாக திறந்துவைப்பு!

930 0

பருத்தித்துறை நகரத்தின் மரபுரிமை சின்னங்களில் ஒன்றாக விளங்கிவரும் தெருமூடி மடம் புனரமைக்கப்பட்டு வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. தைத்திருநாளாகிய இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில், கனரக வாகனத்தினால சேதமாக்கப்பட்டிருந்த பருத்தித்துறை தெருமூடி மடம் புனரமைக்கப்பட்டு மீளுருவாக்கம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பிரதேச செயலர் ஆழ்வாப்பிள்ளை சிறி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக தொல்லியல் திணைக்கள உதவிப் பணிப்பாளர் வருணி ஜெயதிலக, பருத்தி நகர் அபிவிருத்திச் சங்கம் சுவிஸ் நிறுவன தலைவர் க.வள்ளிநாயகன், யாழ் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் வரலாற்றுத்துறைத் தலைவராகவும் சிரேஷ்ட மாணவ ஆலோசகராகவும் கடமையாற்றி வரும் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம், பேராசிரியர் கிருஸ்துராஜா, பருத்தித்துறை நகரசபை தவிசாளர் இருதயராஜ் உள்ளிட்ட நகரசபை உறுப்பினர்கள், பருத்தி நகர் அபிவிருத்திச் சங்க செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் பங்குபற்றியிருந்தனர்.

புனரமைக்கப்பட்டு மீளுருவாக்கம் செய்யப்பட்டிருந்த பருத்தித்துறை தெருமூடி மடத்தின் கல்வெட்டினை திரை நீக்கம் செய்து வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டத்தை தொடர்ந்து பருத்தித்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நிகழ்வுகள் நடைபெற்றிருந்தது.

மாட்டு வண்டிகளிலும் கால்நடையாகவும் பயணம் செய்பவர்கள் இளைப்பாறுவதற்கும் கால்நடைகள் தாகம் தீர்த்து ஆறிச்செல்லும் வகையிலும் பருத்தித்துறை தும்பளை வீதியில் 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தெருமூடி மடம் கனரக வாகனத்தினால் பலதடவை சேதமாக்கப்பட்டிருந்து.

தொல்பொருள் திணைக்களத்தின் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டிருந்த இத் தெருமூடி மடத்தை புனரமைத்து மீளுருவாக்கம் செய்வதற்கு பருத்தித்துறையைச் சேர்ந்த புலம்பெயர் ஆர்வலரும், பருத்தி நகர் அபிவிருத்திச் சங்கம் சுவிஸ் நிறுவுநருமான க.வள்ளிநாயகன் முன்வந்திருந்தார். அதற்கமைவாக பருத்தி நகர் அபிவிருத்திச் சங்க செயற்பாட்டாளர்கள் பருத்தித்துறை பிரதேச செயலர் ஒத்துழைப்புடன் இக்கைங்கரியத்தை நிறைவேற்றியுள்ளார்கள்.

தொல்பொருள் திணைக்களத்திற்குட்பட்ட மரபுரிமை சின்னமாக பொறுப்பேற்கப்பட்டிருந்த பருத்தித்துறை தெருமூடி மடத்தை புனரமைத்து மீளுருவாக்கம் செய்வதற்கு ஏற்பட்ட சுமார் பன்னிரண்டு இலட்சம் ரூபா செலவு முழுவதையும் பொறுப்பேற்று, பருத்தி நகர் அபிவிருத்திச் சங்கம் சுவிஸ் இலங்கை வரலாற்றிலே முன்னுதாரணமான சேவையை செய்துள்ளமை அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது.

தமிழர் தாயகத்திலுள்ள மரபுரிமைச் சின்னங்களை அந்தந்த பிரதேசங்களை சேர்ந்த ஆர்வலர்களோ புலம்பெயர்வாழ் உறவுகளோ இதேபோன்று புனரமைத்து மீளுருவாகம் செய்யவோ, பராமரிக்கவோ முன்வந்தால் இருக்கும் மரபுரிமைச் சின்னங்களையென்றாலும் அழிவிலிருந்து பாதுகாக்கலாம் என நிகழ்வில் உரையாற்றிய அனைவரும் குறிப்பிட்டுக் கூறியிருந்தமை உண்மையில் சிந்திக்க வேண்டியதே.

செய்தி மற்றும் படங்கள் இரா.மயூதரன்.