தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பிளவு படுத்தும் எண்ணமில்லை-சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

345 0

downloadதமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்தெறிய வேண்டிய அவசியம் தனக்கு இல்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் ஒற்றுமையை சீர்குலைக்க தாம் முயற்சி செயற்வதாக எழும் தனது கருத்துக்களில் வலு இருக்கின்றதா என்பதைக் கூட்டமைப்பினர் பரிசீலித்துப் பார்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கூட்டமைப்பின் ஒற்றுமை தம்மால் சீர்குலைந்து போகக்கூடும் என்ற கருத்து பத்திரிகைகளால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இது சிலரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம் அல்லது தனிப்பட்டவர்களின் அரசியல் பிரதிபலிப்பாக இருக்கலாம்.

எந்த மனோநிலையுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் கோரிக்கையை ஏற்று அரசியலுக்குள் பிரவேசித்தேனோ அதே மனோநிலையில் தான் தற்போதும் உள்ளேன்.

எனக்குப் பதவிகள், அதிகாரங்கள் முக்கியமல்ல அவற்றை அடைய வேண்டும் என்ற அவாவும் எனக்கில்லை. மக்களின் எதிர்பார்பொன்றே என்னைத் தொடர்ந்து பதவியில் வைத்துக் கொண்டிருக்கின்றது.

ஆகவே கூட்டமைப்பை உடைத்தெறிய வேண்டிய அவசியம் எனக்கில்லை. ஆனால் அது கொள்கை ரீதியானது. ஒரு அமைப்பின் கொள்கைகள் மாறலாம். அதனால் அந்த அமைப்பை பிளவு படுத்தவே மாற்றுக் கொள்கை வெளியிடப்படுகின்றது என்று எண்ணுவது மடமை.

அது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரான கருத்து. ஆகவே முரண்பாடுகள் இருப்பதால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு உயிரோட்டம் நிறைந்த ஜனநாயக கூட்டமைப்பாக இருந்து வருகின்றது.

சில சமயங்களில் எமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் எதைக் கூறியிருந்தாலும் அவற்றை மாற்றிப் பேரம் பேசத் தலைவர்களுக்கு உரித்துண்டு என்ற கருத்து வெளியிடப்படுவதுண்டு.

தலைவர்கள் கொள்கைகளில் இருந்து மாறுபடுவதாக இருந்தால் மாற்றுக் கருத்துக்களை மக்கள் ஏற்க வேண்டும் என்பதே எனது கருத்து. அவ்வாறில்லை என்றால் பெண், பொன், காணி, பதவி, அதிகாரம் என்பவற்றால் எமது தலைவர்களை மற்றவர்கள் விலைக்கு வாங்கிவிட முடியும்.
என்று மேலும் தெரிவித்தார்.