இத்தாலி அருகே கடலில் தவித்த 2,200 புலம்பெயர்ந்தோர் மீட்பு

290 0

201611060933440003_more-than-2200-migrants-rescued-in-mediterranean_secvpfமத்திய தரைக்கடல் வழியாக ரப்பர் படகுகள் மூலம் ஐரோப்பாவுக்குள் ஊடுருவ முயன்ற 2,200 பேரை மீட்டுள்ள இத்தாலிய கடலோரக் காவல் படையினர், பத்து பிரேதங்களையும் கண்டெடுத்துள்ளனர்.

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் இந்த அகதிகள், ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர்.

மத்திய தரைக்கடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 21 லட்சத்தை எட்டியுள்ளது.

இதுதவிர, கடந்த ஆண்டில் மட்டும் இத்தாலி நாட்டுக்கு புகலிடம் தேடி வரும் வழியில் சுமார் ஐயாயிரம் பேர் காணாமல் போனதாகவும், கடலில் மூழ்கி இறந்துவிட்டதாகவும் தெரிகின்றது. இருப்பினும், உள்நாட்டில் பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் இன்றும் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக படையெடுத்தபடியாகவே உள்ளனர்.

அன்காரா நாட்டு கடல் எல்லை வழியாக கிரீஸ் நாட்டுக்குள் நுழைந்து விடாமல் அங்கிருந்து பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று அங்கே அகதிகளாக குடியேறி விடலாம் என்பது இவர்களின் விருப்பமாக உள்ளது.

எனவே, ரத்தத்தை உறையவைக்கும் குளிர் காற்று, பசியால் அலையும் சுறா, திமிங்கலம் உள்ளிட்ட ராட்சத மீன்களின் தாக்குதல் மற்றும் பேரலைகளுக்கு மத்தியில் தங்களது உயிரைப் பணயம் வைத்து இவர்கள் ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் இரண்டு லட்சம் குடியேறிகள் ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டபுறம்பாக நுழைந்துள்ளனர். இவர்களில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் துருக்கி வழியாக வந்துள்ளனர். கடல் பயணத்தின்போது நிகழ்ந்த எதிர்பாராத விபத்துகளில் சிக்கி மூன்றாயிரத்துக்கும் அதிகமானோர் கடந்த ஒன்பது மாதங்களில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று மட்டும் மத்திய தரைக்கடல் வழியாக 13 ரப்பர் படகுகள், இரு இயந்திரப் படகுகள் மூலம் இத்தாலி நாட்டு கடல் எல்லையை கடக்க முயன்ற சுமார் 2200 பேரை இத்தாலி  கடலோரக் காவல் படையினர் மிலன் நகரை ஒட்டியுள்ள கடல்பகுதியில் தடுத்து நிறுத்தி மீட்டுள்ளனர். பத்து பிரேதங்களையும் கண்டெடுத்துள்ளனர்.

இதைப்போன்ற ஆபத்தான கடல் பயணங்களின் மூலம் கடந்த 2015-ம் ஆண்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 3,777 ஆக உள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மட்டும் சுமார் 4200 குடியேறிகள் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி உயிரிழந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.