குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி ஜாமா மஸ்ஜித் அருகே பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் இன்று திடீர் போராட்டத்தில் குதித்தனர்.திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் 15 மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
போராட்டக்காரர்களில் சிலர் மகாத்மா காந்தி மற்றும் பாபாசாகேப் அம்பேதகரின் படங்களை ஏந்தியவாறு மத்திய அரசு மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
முன்னதாக, இன்று ஜாமா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் வரை பேரணி செல்ல போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்த பீம்சேனா அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டிருப்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.ஆளில்லா விமானங்கள் மூலம் அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.