உலகின் மிக ஆபத்தான நகரம் ஏமனின் ஹோடிடா

260 0

ஏமனில் போர் நடைபெறும் பகுதியான ஹோடிடா நகரம் உலகின் ஆபத்தான நகரம் என்று சர்வதேச உதவி குழு ஒன்று தெரிவித்துள்ளது.

ஏமனில் போரை நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அங்குள்ள ஹோடிடா நகரை உலகின் ஆபத்தான நகராக சர்வதேச தன்னார்வ குழு ஒன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “ஏமனில் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் போர் நிறுத்தம் ஏற்பட்டத்திலிருந்து சுமார் 799 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். ஏமன் தொடர்ந்து கணக்கிடமுடியாத மனிதாபிமான நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது” என்றார்.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது. மேலும் ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஐந்து ஆண்டுகளாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சவுதி, ஏமன் போரை படிப்படியாக முடிவுக்குக் கொண்டுவர முயற்சி எடுத்து வருகிறது. இதன் காரணமாக அங்கு தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது