நலத்திட்ட உதவிகள் பெற்றுத்தருவதாக என் கட்சி நிர்வாகிகள் யாரும் கூறினால் நம்பவேண்டாம் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. பேசியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கருணாஸ் எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம், திருவாடானை பகுதிகளில் ஓய்வூதியம் பற்றிய மனுக்கள் 2060 பெறப்பட்டு அதில் 1110 மனுக்கள் தகுதியானவை என தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு மக்கள் திட்ட முகாமில் அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
நலத்திட்ட உதவிகள் பெற்று தருகிறோம் என கூறி கொண்டு முக்குலத் தோர் புலிப்படை நிர்வாகிகள் மற்றும் யாராவது வந்தால் நம்ப வேண்டாம். திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலோ அல்லது என்னிடமோ, அரசு அதிகாரிகளிடமோ மனுக்களை நேரடியாக கொடுங்கள். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.