அமெரிக்காவில் மைசூர் மாணவர் சுட்டுக்கொலை

220 0

அமெரிக்காவில் மர்மநபரால் மைசூர் மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே உள்ள குவேம்புநகரை சேர்ந்தவர் அபிஷேக் சுதேஷ்பட் (25).மைசூரில் என்ஜினீயரிங் படித்து முடித்த இவர் மேல் படிப்புக்காக கடந்த 1½ வருடத்துக்கு முன்பு அமெரிக்கா சென்றார். அங்கு கலிபோர்னியாவின் கான்பெர்னாக்பிகோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.

பகுதி நேரமாக அங்குள்ள சாலையோர உணவு விடுதி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் அபிஷேக்கை சுட்டுக்கொலை செய்தார்.

அபிஷேக் கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு என்ஜினீயரிங் படித்த மைசூரை சேர்ந்த ஸ்ரீவத்கா என்பவர் தற்போது அமெரிக்காவில் பணியாற்றுகிறார். அவரும் அபிஷேக்குடன் உணவு விடுதியில் வேலை பார்க்கிறார்.

அவர் தான் அபிஷேக்கை மர்மநபர் சுட்டுக்கொன்றது குறித்து அவரின் குடும்பத்தினருக்கு தகவல் கூறினார். இதைக்கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அபிஷேக்கின் தந்தை சுதேஷ் சந்த்யோகா. மாஸ்டரான இவர் மைசூரில் உபநிவித் யோகா மையம் நடத்தி வருகிறார். அவர் கூறுகையில், “அமெரிக்கா மற்றும் இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு என்ன நடந்தது? எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரித்து வருகிறோம். இன்னும் தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை” என்றார்.

அபிஷேக் கொலை நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி கேமிரா காட்சிகளை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அபிஷேக்கின் சகோதரரும், உடலை பெறுவதற்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார்.