தங்க நகை வேண்டாம்… தக்காளி நகையே போதும்: உலகின் கவனத்தை ஈர்த்த பாகிஸ்தான் மணப்பெண்

194 0

பாகிஸ்தானில் மணப்பெண் ஒருவர் தங்க நகைகளுக்கு பதிலாக தக்காளிகளால் செய்யப்பட்ட நகைகளை அணிந்திருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

பாகிஸ்தானில் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து தக்காளி இறக்குமதி தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி 300 ரூபாயை தாண்டியதால், சாமானிய மக்கள் தக்காளியை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தக்காளி விலையைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தக்காளி விலை இவ்வாறு ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், இதனை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், பாகிஸ்தானின் மோசமான பொருளாதார நிலையை சுட்டிக்காட்டும் வகையிலும், அந்த நாட்டைச் சேர்ந்த மணப்பெண் ஒருவர், தங்க நகைகள் அணிவதற்கு பதிலாக தக்காளி நகைகளை அணிந்திருக்கிறார்.
மணப்பெண் கையில் அணிந்திருந்த தக்காளி வளையல்
கழுத்து, காது மற்றும் கைகளில் தங்க நகை போன்று தக்காளியை கோர்த்து செய்யப்பட்ட நகையை அணிந்திருந்தார் அவர். தலையில் நெத்திச்சுட்டியாகவும் ஒரு தக்காளி அலங்கரித்திருந்தது. இவ்வாறு தங்கத்திற்கு நிகராக தக்காளியை ஒப்பிட்டிருந்த அவரது புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அந்த மணப்பெண்ணிடம் உள்ளூர் செய்தியாளர் ஒருவர் பேட்டி எடுத்து அந்த வீடியோயை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பேசும் மணப்பெண், தனது குடும்பத்தினர் தனக்கு திருமண சீதனமாக மூன்று கூடை தக்காளியை பரிசளித்திருப்பதாக கூறினார்.