வவுனியா வளாகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்!

480 0

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை தொழில்நுட்ப பீட மாணவர்கள் முற்றுகையிட்டமையால் பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது. பொலிசார் தலையிட்டு நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

நேற்று செவ்வாய்கிழமை இரவு 8.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் கீழான பம்பைமடுவில் உள்ள தொழில்நுட்பபீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், வயிற்றோட்டம் போன்ற தொற்று நோய் ஏற்பட்டு வருகின்றது. கடந்த 4 நாட்களில் 70 வரையான மாணவர்கள் சிகிச்சை பெற்றுள்ளதுடன், 16 மாணவர்கள் வைத்தியசாலையில தங்கி சிகிச்சையும் பெற்றுள்ளனர்.  இந்நிலையில் மாணவர்களுக்கான பரீட்சைகளும் நடைபெற்று வருகின்றது. நோய் தொற்று காரணமாக மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாத நிலையில் பரீட்சைகள் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் சுமார் 80 மாணவர்கள் வளாகத்தின் பூங்கா வீதியில் உள்ள வளாக முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதன்போது குறித்த இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன், அதன் பின் பல்கலைக்கழக வளாக முதல்வருடனும் தொலைபேசியில் கலந்துரையாடினார். இதனையடுத்து இன்றைய பரீட்சைகள் நிறுத்தப்பட்டதுடன், மாணவர்களின் விடுதி மற்றும் வளாகத்தில் ஏற்பட்டுள்ள நோய் தொற்று தொடர்பில் நாளை கலந்துரையாடி தீர்வு எடுப்பதாக வழங்கப்பட்ட உறுதி மொழியையடுத்து போராட்டம் சுமார் 1 மணிநேரத்தின் பின்னர் கைவிடப்பட்டது.

 

இதேவேளை, குறித்த வளாக மாணவர்கள் கடந்த சில தினங்களாக தொற்று நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதுடன், மருத்து அறிக்கைகளும் நோய் தொற்றை உறுதிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.