தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அந்தக்கட்சியினரும் சீனா வின் முகவர்களாக செயற்படுகின்றனரா?இந்தியா என்று சொன்னால் ஒரு வித வருத்தம் அவருக்கு ஏற்படுகின்றது. எனவே அவர் தன்னுடைய நிலைப்பாடுகள், உணர்வுகள் சரியா என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டிய தேவை உள்ளது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்பிரேமச் சந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் யாழ்.இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த்தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய ஐந்து கட்சிகள் பதின்மூன்று கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் அவர்கள் கட்சிகளுடனும் கலந்துரையாடுவதற்காகவும் முன்வைத்திருக்கின்றனர். இந்த 13 கோரிக்கைகளையும் உருவாக்குவதில் ஈழமக்கள் புரட்சிகர முன்னணி , தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியினருடன் இணைந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஈடுபட்டனது. இதற்கான ஆவணமும் தயாரிக்கப்பட்டது.
இன்னும் குறிப்பாக கூறுவதாக இருந்தால் இந்த ஆவணத்தில் இருக்கக்கூடிய அத்தனை விடயங்களையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஏற்றுக்கொண்டிருந்தது. அவர்கள் ஏற்றுக்கொள்ளாத ஒரு விடயமும் இந்த ஆவணத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
ஆகவே தயாரிக்கப்பட்டுள்ள பதின்மூன்று கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தில் ஐந்து கட்சிகள் மாத்திரமே கையெழுத்திட்டுள்ளன. ஆனாலும் ஆறு கட்சிகளும் ஏற்றுக்கொண்ட ஆவணமாகத்தான் இது இருக்கின்றது. இந்த ஆவணத்தை இறுதிப்படுத்துகின்ற நேரத்தில் தமிழ் தேசிய மக்கள் முண்ணனி பல திருத்தங்களை கூறியுள்ளது. அவை உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறான சூழ்நிலையில் இந்த ஐந்து கட்சிகளும் இந்திய அரசாங்கம் செல்வதைக் கேட்டுத்தான் இதனைச் செய்திருக்கின்றன என்றுகூறுவதும் இந்திய அரசாங்கத்தின் முகவர்களாக செயற்படுகிறார்கள் என்று கூறுவதும் இவர்கள் கருத்துக்களில் பலத்த சந்தேகங்களை உருவாக்குகின்றது.
இந்த ஆவணத்தில் பல திருத்தங்களை சொன்னவர்கள் இவர்கள். ஆகவே இவர்கள் யார் சொல்லி இந்தக் கருத்துக்களை கொண்டு வந்தார்கள். இந்தியா சொல்லித்தான் இவர்கள் இந்தத் திருத்தங்களை கொண்டு வந்தார்களா? இவர்கள் கொண்டு வந்த திருத்தங்களைத்தான் தற்போது இவர்கள் விமர்சிக்கின்றார்கள். இந்த ஆவணத்தில் இவர்களது பங்கு பற்றல்கள் இருக்கின்றது. ஆகவே அவர்களும் ஏற்றுக்கொண்ட இந்த ஆவணத்தை விமர்சிப்பது தவறானது இந்தியா என்று சொன்னால் ஒரு விதமான நோய் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. நிச்சயமாக இவர்கள் கூறும் எல்லா விடயங்களைப் பார்க்கும் போது இந்தியாவின் வேலை இந்திய முகவர்களின் வேலை என்று கூறுவதும் அவர்கள் சொல்லி இவர்கள் செய்கின்றார்கள் என்று கூறுவதும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் சீனாவினுடைய முகவர்களாக இருக்கிறீர்களா? இவர்களைப் பொறுத்தவரையில் தொடர்ச்சியாக கஜேந்திர குமார் பொன்னம்பலமும் அவருடைய கட்சியினரும் இந்திய முத்திரையை எமக்கு குத்துவது ஏன் என்பது விளங்கவில்லை.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலத்திற்கு மிகமோசமான வருத்தம் நிச்சயமாக இருக்கின்றது. இந்தியா என்று சொன்னால் அவருக்கு அத்தகைய வருத்தம் வருவது போல் தான் இருக்கின்றது. ஆகவேஅவர் தன்னுடைய நிலைப்பாடுகள், உணர்வுகள் சரியா என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. காரணம் பல்கலைக்கழக மாணவர்கள் எல்லோரும் ஆறு கட்சிகளையும் அழைத்து அவர்களுடன் கலந்துரையாடினார்கள். ஐந்து முறை கலந்துபேசி ஐந்தாவது முறை கையெப்பம் வைக்கும் சூழ்நிலையில் தான் இவர்கள் ஒரு கோரிக்கையை ஏற்கும்படி கூறினார்கள். இதனைப் பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணம் அனைவரும் ஏற்றுக்கொண்ட விடயம் தான். மீண்டும் சொல்லப்போனால் ஆறு கட்சிகளும் ஏற்றுக்கொண்ட விடயமே இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்றார்.