யாழில் 15 கிலோ எடையுடைய 2 கிளைமோர் குண்டுகள் மீட்பு!

205 0

யாழ்பாணம் – கோண்டாவில் – வரணி பகுதியில் வெற்றுக் காணியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 15 கிலோ எடையுள்ள இரண்டு கிளைமோர் குண்டுகள் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

 

திருமலை – சேருநுவர பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இராணுவத்தினரால் விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஜோசப் பீட்டர் றொபின்சன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து கிளிநொச்சியில் உள்ள அவரது வீட்டிலிருந்து பெருந்தொகையான வெடிப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இதன்போது குறித்த வீட்டிலிருந்த அவரது மனைவியையும் , சகோதரியையும் கைது செய்த பொலிஸார்,  சந்தேக நபர்கள் மூவரையும் விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

பயங்கரவாத விசாரணை பிரிவினரின் விசாரணைகளின் அடிப்படையிலே , இன்று திங்கட்கிழமை யாழ்பாணம் – கோண்டாவில் – வரணி பகுதியில் காணியொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 15 கிலோ நிறையுடைய கிளைமோர் குண்டுகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளன.

இதையடுத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பயங்கரவாத விசாரணை பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.