தேனி மசாலா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- பல லட்சம்! ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கருகின

181 0

தேனி அருகே மசாலா தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கருகின.தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியில் ஈஸ்டர்ன் மசாலா தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இங்கு இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, தொழிற்சாலையின் குடோனில் தீப்பிடித்தது. பின்னர் தீ மளமளவெனப் பரவி, ஆலையின் மற்ற பகுதிகளிலும்  தீப்பிடித்து எரிந்தது. குடோனில் உள்ள மசாலா பொருட்கள் கருகின. இதனால் அப்பகுதியில் கரும்புகை எழுந்தது. ஊழியர்கள் உடனடியாக வெளியேறினர்.

தீ விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 4 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மசாலாப் பொருட்கள் கருகியதால், குறிப்பாக மிளகாய் பொடி எரிந்ததால் ஏற்பட்ட நெடி காரணமாக தீயணைப்பு வீரர்களால் அருகில் நெருங்க முடியவில்லை.

விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டார். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மசாலாப் பொருட்கள் கருகின.