ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை விதித்தது உச்சநீதிமன்றம்

219 0

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.தமிழகத்தில் 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு, அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இன்பதுரை 69590 வாக்குகளும், அப்பாவு 69541 வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், வாக்கு எண்ணிக்கையின்போது 203 தபால் வாக்குகளை எண்ணாமல் அதிகாரிகள் நிராகரித்ததாகவும், அந்த வாக்குகளை எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. மேலும், 19, 20 மற்றும் 21வது சுற்றில் எண்ணப்பட்ட வாக்குகளையும் மீண்டும் எண்ண உத்தரவிட்டது.

அதன்படி இன்று காலை 11.30 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பின்னர் வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
அப்பாவு- இன்பதுரை

இந்நிலையில் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. இன்பதுரை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம் முடிவை வெளியிட தடை விதித்துள்ளது.  இன்பதுரையின் மனு மீதான விசாரணையை அக்.23க்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.