இந்த மாத இறுதிக்குள் பொருளாதார பாதிப்புகள் சீராகும்- வானதி சீனிவாசன் பேட்டி

278 0

இந்த மாத இறுதிக்குள் பொருளாதார நிலையில் உள்ள பாதிப்புகள் சரியாகும் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கோவையில் பாரதீய ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது-
பாரதீய ஜனதாவின் ஓவ்வொரு கிளைகளில் தேர்தல் நடத்தப்பட்டு வருகின்றது. அமைப்பு தேர்தல் பணிகளில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காஷ்மீர் விவகாரத்தில் 370 நீக்கப்பட்டதில் பிரதமரின் நடவடிக்கை குறித்து விளக்குவதற்காக மாவட்டம் தோறும் முக்கிய நிர்வாகிகளை கொண்டு பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. வருகிற 17-ந் தேதி பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு சேவை வாரம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மருத்துவ முகாம்கள் , பிளாஸ்டிக் எதிர்ப்பு நிகழ்வுகள், மாற்றுதிறனாளிகளுக்கான மேம்பாட்டு பணிகள், மரம் நடுவது என பல நடவடிக்கைகள் செய்யப்பட இருக்கிறது.
நவம்பர் முதல் வாரத்தில் மாநில தலைவருக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதற்கிடையிலும் மாநில தலைவர் அறிவிக்கப்படவும் வாய்ப்புண்டு. மாநில தலைவர் இல்லை என்றாலும் கட்சி பணிகளில் எந்த சுணக்கமும் இல்லை. மாநில தலைவராக தேர்வு செய்ய வாய்ப்பு இருக்கும் பட்டியலில் 15 பேர் வரை இருக்கின்றனர். பொருளாதார பாதிப்பு காரணமாக வேலை இழப்பு இருப்பதாக தொழில் அமைப்புகள் சொல்லவில்லை. இரவு பணி மட்டும் நிறுத்தி விட்டதாக தொழில் அமைப்புகள் தெரிவிக்கின்றன. பீதியை கிளப்பி விடுவதற்கான தகவல்கள் பரப்பபடுகின்றன.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள மந்த நிலையில் இந்தியாவிற்கு பாதிப்பு வரலாம் என்ற நிலை இருக்கிறது. 20 நாட்களுக்குள்  நிலைமை சீராக வாய்ப்பு இருக்கிறது. நம்பிக்கை இழக்காமல் தொழில் அமைப்புகள் வங்கிகளில் பேச வேண்டும். இந்த மாத இறுதிக்குள் பொருளாதார நிலையில் உள்ள பாதிப்புகள் சரியாகும். சர்க்கரை ஆலைகள் நெருக்கடியில் இருக்கின்றன. அதை சரி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தொழில்களுக்கு பாதிப்பு இல்லை என சொல்லவில்லை. முற்றிலும் முடங்கி விட வில்லை. தற்போது ஏற்பட்டுள்ள சிறு பாதிப்புகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஜாப் ஆர்டருக்கான ஜி.எஸ்.டியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற சிறு, குறு தொழில் அமைப்பினரின் கோரிக்கை தொடர்பாக விரைவில் ஒரு நல்ல அறிவிப்பு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.