2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது

325 0

துபாய் விமான நிலையத்தில் 2 மாம்பழங்களால் இந்திய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.

உலகிலேயே அதிக பயணிகள் வந்து செல்லும் விமான நிலையங்களில், துபாய் விமான நிலையமும் ஒன்றாக உள்ளது. இந்த விமான நிலையத்தில் இந்தியர் ஒருவர் ஊழியராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2017ம் ஆண்டு ஒரு நாள், அவருக்கு பணியின்போது கடுமையான தாகம் எடுத்துள்ளது. சுற்றிப் பார்த்தும் எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. அங்கு கன்வேயர் பெல்டில் பயணிகளின் லக்கேஜ்ஜிகள் சென்றுக் கொண்டிருந்தன.

அதன் அருகே சென்று இந்திய பயணி ஒருவரின் பேக்கினை திறந்து தண்ணீர் இருக்கிறதா? என பார்த்துள்ளார். ஒரு பாக்ஸ் இருந்துள்ளது. திறந்து பார்த்தபோது  மாம்பழங்கள் இருந்துள்ளன. அதில் 2 மாம்பழங்களை தின்றுவிட்டு வழக்கம்போல பணியை தொடர்ந்துள்ளார்.

இந்த சம்பவத்துக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவருக்கு போலீசாரால் சம்மன் அனுப்பப்பட்டது. பின்னர் அவர் தங்கியிருந்த அறையில் போலீசார் பொருட்கள் ஏதும் உள்ளதா? என சோதனை செய்துள்ளனர். ஆனால், எதுவும் சிக்கவில்லை. பின்னர் சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது பயணியின் லக்கேஜ்ஜினை அவர் திறந்துள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இது குறித்து இந்திய ஊழியர் கூறுகையில், ‘கடுமையான தாகம். அருகில் எங்கும் தண்ணீர் இல்லை.
பாக்ஸில் இருந்த 2 மாம்பழங்களை தின்றேன்’ என கூறியுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.