யாழ். பல்கலையில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்

267 0

யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆட்சேர்ப்பில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது.

இந்த போராட்டம் யாழ். பல்கலைக்கழக முன்றலில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது.

இந்நிலையில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் போராட்டக்களத்திற்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அத்தோடு அவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் கல்விசாரா ஊழியர்களின் வெவ்வேறு பதவிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு உயர்கல்வி அமைச்சிலிருந்து பெயர்ப்பட்டியல் அனுப்பப்பட்டது.

அந்த பட்டியலில் அரசியல்வாதிகளின் சிபாரிசுகளினால் வந்தவர்களே உள்ளதாகவும் அதனை ஏற்க முடியாது என தெரிவித்தே பல்கலை ஊழியர்கள் இவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தமக்கான நீதி கிடைக்கும் வரையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் இனியும் தாமதிக்காது சம்மந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.