முறிகண்டி விபத்தில் புலம்பெயர்ந்த பிரித்தானிய தமிழர் உயிரிழப்பு!

328 0

முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் புலம்பெயர்ந்த பிரித்தானிய தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய ஆதரவாளர் என அறியப்படுகிறது.

முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முறிகண்டி யாழ். பல்கலைக்கழக வளாகச் சந்தி அருகில் இன்று (புதன்கிழமை) மாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும் கிளிநொச்சியிலிருந்து முறிகண்டி நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வசிக்கும் தீபன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.