தான் வகித்து வரும் பதவியை மறைத்து, கடந்த ஆண்டு கேரளாவில் நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
கேரள மாநிலம் கடந்த நூறு ஆண்டுகளில் சந்திக்காத பேரழிவை கடந்த ஆண்டு பெய்த கனமழையால் சந்தித்தது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 488 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
அந்த நிலையில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் 10 நாட்களாக நிவாரண முகாம்களில் தான் யார் என்பதையே மறைத்தும் மறந்தும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்தியாவின் யூனியன் பிரதேசங்களுள் ஒன்றான தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் கண்ணன் கோபிநாத்.
அங்கிருந்து பல முகாம்களுக்கு சென்ற அவர் தொடர்ந்து 10 நாட்களாக தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்பதையே மறைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து, தனது ஐஏஎஸ் பணிகளை தொடர அங்கிருந்து சத்தமின்றி புறப்பட்டுச் சென்றார்.
கேரளா வந்த அடுத்த நாளே மீட்புப் பணிகளுக்காக கண்ணன் விடுப்பு பெற்றுவிட்டார். ஆனால் அவர் மீட்புப் பணியில் ஈடுபடுகிறார் என்பதை அறிந்த அரசு நிர்வாகம், அவரது விடுப்பு நாள்களை வேலை செய்த நாட்களாக கணக்கெடுத்துக் கொண்டது.
தான் வகித்து வரும் பதவியை மறைத்து சாதாரண மக்களுடன் மக்களாக நின்று நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத், தனது பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார். மேலும் தனது ராஜினாமா கடிதம் ஏற்கப்படும் வரை பணியில் தொடர்ந்து ஈடுபடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.