தற்கொலைகள் அதிகரித்து வருவதால் எலி பேஸ்ட்டை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மருத்துவம னையில் டயாலிசிஸ் சிறப்பு சிகிச்சை பிரிவை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்தார். இதன் பின்னர் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு காதொலி கருவிகளை வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்பவர்கள் எண்ணிக்கை 2 சதவீதமாக இருந்தது. தற்போது தமிழக அரசு எடுத்த முயற்சியில் ஆயிரம் டயாலிசிஸ் மிஷின்கள் மாவட்ட முதல் தாலுகா மருத்துவமனை வரை வழங்கியதன் அடிப்படையில் டயாலிசிஸ் செய்வோரின் எண்ணிக்கை 19 சதவீதமாக உயர்ந்துள்ளது.
எலி பேஸ்ட்டில் கொடிய விஷத்தன்மை உள்ளது. எலி பேஸ்ட்டிற்கு தடை விதிப்பது அனைத்து துறையையும் சார்ந்தது. அதனால் அதற்கு தடை விதிக்க தமிழக அரசிடம் சுகாதாரத்துறை சார்பில் பரிந்துரைக்கப்படும்.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குடிநீர் பிரச்சினை என்பது கிடையாது. இதனால் டயாலிசிஸ் செய்வதில் எந்தவிதமான சிரமமும் இல்லை.அனைத்து மருத்துவமனைகளிலும் தனி பிரிவு அமைக்கப்பட்டு டயாலிசிஸ் செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

